EBOOK

Adiyarku Nalla Perumal

Ki. Va. Jagannathan
(0)

About

கந்தர் அலங்கார விரிவுரை நூல் வரிசையில் இது ஏழாவது. இதில் 33-ஆம் பாடல் முதல் 38-ஆம் பாடல் வரையில் உள்ள ஆறு பாடல்கள் விளக்கம் பெறுகின்றன. முதற் பாடல் முருகனுடைய அடியார்கள் இம்மை மறுமைப் பயனை அடைவார்கள் என்பதைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் காம நோயின் வன்மையைத் தெரிவிக்கிறது. மூன்றாவது பக்தித் துறையைப் பற்றிக் கூறுகிறது. அடுத்தது செல்வம் நிலையாமையையும் இன்ப துன்பங்களின் இயல்பையும் அறிவிக்கிறது. ஐந்தாவது பாடல் எந்த நிலையிலும் முருகனுடைய வேலை நினைக்கும் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறது. ஆறாவது பாடல் முருகன் அருள் இருந்தால் நாளாலும் கோளாலும் வினையினாலும் கூற்றுவனாலும் வரும் துன்பங்கள் இல்லை என்று தைரியம் அளிக்கிறது.

வெற்றிவேற் பெருமாளும், அடியார்க்கு நல்ல பெருமாளும், அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாளும், பொட்டாக வெற்பைப் பொருத கந்தனும், வெஞ்சூரனைக் குத்தியவனும், அமராவதி கொண்ட கொற்றவனும், காவிரிச் செங்கோடனும், குன்றம் எட்டும் கிழித்தோடும் வேலுடையவனும், சூரனைக் கொன்ற ராவுத்தனும், குமரேசனும், தாளில் சிலம்பும் சதங்கையும் தண்டையும் அணிந்தவனும், சண்முகனும், தோளில் கடம்பு புனைந்தவனும் ஆகிய முருகனை இப்பாடல்களிலே காணுகிறோம்.

பிறவி இறுதி இல்லாமல் தொடர்ந்து வருவதையும், வறுமையானது வாழ்வு முழுவதையும் கெடுப்பதையும், மனம் கட்டுக்கு அடங்காமல் செல்வதையும், அதற்கு ஞானம் தட்டுப்படாமல் இருப்பதையும், வேல் போன்ற விழியையுடைய மகளிரால் மயல் உண்டாவதையும், அந்த மயலில் மனம் கட்டுண்டு அல்லற்படுவதையும் அருணகிரியார் சொல்கிறார்.

Related Subjects

Artists