நாயன்மார் கதையின் மூன்றாம் பகுதியாகிய இதில் ஏயர் கோன் கலிக்காம நாயனார் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையில் உள்ள முப்பத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் அடங்கி யுள்ளன. அடுத்த தொகுதியோடு இது முற்றுப் பெறும்.
பெரும்பாலும் சேக்கிழாருடைய திருவாக்கை அடி யொற்றியே இந்த வரலாறுகளை எழுதினாலும், சில இடங்களில் சில கருத்துக் களை விளக்கியிருக்கிறேன்.
அமிர்த வசனி' என்னும் பத்திரிகையில் வந்தவை இந்த வரலாறுகள். அதன் ஆசிரியராகிய திரு சு. முத்துசாமி ஐயரவர்களுக்கு என் நன்றி உரியது.
காவிரியின் வடகரையில் பெருமங்கலம் என்று வளம் மிக்க ஊர் ஒன்று உண்டு. அங்கே வேளாண்மை செய்யும் ஏயர் குலம் என்ற ஒரு குலத்தினர் பலர் வாழ்ந்திருந்தனர். அக் குலத்தினர் சோழ அரசர்களின் சேனாபதிகளாக இருக்கும் பெருமை உடையவர்கள்.
அந்தக் குலத்தில் கலிக்காமர் என்பவர் சிறந்த சிவ பக்தராகத் திகழ்ந்தார். திருப்புன்கூர்ச் சிவாலயத்தில் மிகுதியான திருப்பணிகளைச் செய்தவர் அவர். சிவனடியார்களிடம் பெருமதிப்பு வைத்து அவர்களைப் போற்றி வழிபட்டு வந்தார்.
அக்காலத்தில் திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக இறைவன் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. அதைக் கேட்ட கலிக்காமர், 'நெஞ்சிலே சிறிதும் அச்சம் இல்லாமல் ஒரு பெண்ணினிடம் எம்பிரானைத் தூது விடுவதாவது! இதைக் கேட்டும் உயிர் வாழும் அபாக்கியம் எனக்கு இருக்கிறதே!' என்று வருந்தினார். "இந்தச் செயலைச் செய்தவனுடைய மனம் எவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்! அவனை நான் காண்பேனாகில் என்ன ஆகுமோ, அறியேன்" என்று பொருமினார். அவருடைய சினத்தை ஊரிலுள்ளார் உணர்ந்து கொண்டனர்.